மறைந்ததாக கூறப்பட்ட பிரபாகரன் டெல்லி ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லியில் உயிருடன் இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது சடலத்தைக் காட்டும் வீடியோ காட்சிகளை இலங்கை அரசு வெளியிட்டது. ஆனால் அந்த சடலம் பிரபாகரனுடையதுதானா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்தினரிடம் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாக சிங்களப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தகம் ஒன்றில் இந்த தகவல் இடம் பெற்றிருப்பதாக அந்த சிங்கள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இலங்கை ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர், ’பிரபாகரன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என மறுப்புத் தெரிவித்துள்ளார்.