வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (07:30 IST)

பிரதமர் மோடிக்கு ’கோல்கீப்பர்’ விருது வழங்கிய பில்கேட்ஸ்!

பிரதமர் மோடி அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உலக தலைவர்களை சந்தித்து வரும் நிலையில் அவருக்கு தற்போது உலகின் பெருமைக்குரிய விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது
 
 
இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ’குளோபல் கோல்கீப்பர்’ என்ற விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கினார். பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த விருதுக்கு பலர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது கிடைத்துள்ளது
 
 
குளோபல் கோல்கீப்பர் விருதினை பில்கேட்ஸ் அவர்களிடம் இருந்து பெற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்த விருது எனக்கானது அல்ல. 'தூய்மை இந்தியா' திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தால், ஏழை மக்களும், பெண்களும் அதிக பலன் பெற்றனர் என்று கூறினார்.
 
 
மேலும் தூய்மை என்ற இலக்கை அடைவது மட்டுமல்லாமல், மற்ற இலக்குகளை அடையவும் இந்தியா உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், 'பிட் இந்தியா' மூலம் உடலுறுதி மற்றும் உடல்நலனை பேணிக்காக்க ஊக்கப்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி பேசினார்.