1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (13:42 IST)

பிணவறையில் இருந்த 91 வயது மூதாட்டி, 11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்து டீ கேட்ட அதிசயம்

பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது மூதாட்டி, 11 மணி நேரத்திற்கு பின் எழுந்து டீ கேட்டுள்ளார்.
 
போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் என்னும் 91 வயது முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடலை ஊழியர்கள், பிணவறையில் வைத்துள்ளனர்.
 
11 மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு உடலை வைப்பதற்காக ஊழியர்கள் பிணவறைக்கு வந்துள்ளனர். அப்போது மூதாட்டியின் உடல் அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துப் பார்த்துள்ளனர். இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டுள்ளார்.
 
இதுகுறித்து, தகவலறிந்த மருத்துவமனை மருத்துவர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர். பிறகு அந்த மூதாட்டியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.