1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (12:16 IST)

மாயமான விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இறப்பு சான்றிதழ் அளிக்க முடிவு

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமான எம்.எச் 370 விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் பணி விரைவில் நிறுத்தப்படவுள்ள நிலையில் அந்த விமானத்தில் பயணித்த 239 பேருக்கும் இறப்பு சான்றிதழ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   
மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச் 370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் தேதி நடுவானில் 239 பேரோடு மாயமானது.  
 
நீண்ட நாட்கள் நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு, இந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை இந்த விமானத்தை குறித்தோ, அதில் பயணித்த பயணிகள் குறித்தோ எந்த தகவலும் இல்லை 
 

இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேஷியா நாட்டை சேர்ந்த மீட்பு குழுக்கள்  ஈடுபட்டு வருகின்றன. 
மீட்பு பணியில் எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்காக  நீர்மூழ்கி புளூபின் 21 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடலுக்கடியில் செலுத்தப்பட்டபோது, நம்பிக்கை தரும் வகையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
 
இது குறித்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், 'மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முன்னேற்றம் எதுவும் கிடைக்காததால் விரைவில் அது நிறுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
 
நடுவானில் இந்த விமானம் மாயமாகி 46 நாட்கள் ஆன நிலையில், மலேஷிய அரசு எம்.எச் 370 விமானத்தில் பயணித்த 239 பேருக்கும் இறப்பு சான்றிதழ் அளிக்க முடிவு செய்துள்ளது.