வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (11:25 IST)

தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்- மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடப்பட்டத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.
 
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. 
 
இதனால் பேஸ்புக் பயனாளிகள் தங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டதா என்று அச்சம் அடைந்தனர். மேலும், பேஸ்புக் நிறுவனத்தின் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டது.
 
இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்ட்டில் நடந்த விசாரணையில், நேற்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆஜராகி பதில் அளித்தார். 
 
அதில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை செயலி டெவலப்பர்களிடமிருந்து அனலிட்டிகா நிறுவனம் வாங்கியுள்ளது. பேஸ்புக்கை நான் கல்லூரி படித்து கொண்டிருந்த போது தொடங்கினேன். தற்போது வரை அதை நானேநடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தால் ஏற்பட்ட தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன், இதற்காக மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நேர்மை காப்போம் என்று தெரிவித்தார்.