வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (16:16 IST)

மலேசிய விமானத்தை வீழ்த்தி ஒரே மகளைக் கொன்ற புடினுக்கு தந்தை நன்றி

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் தான் என்று நம்பப்படும் சூழலில், தனது மகள் இறப்புக்கு ரஷ்ய அதிபர் புடினுக்கு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு நன்றி என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அந்த இளம்பெண்ணின் தந்தை.
 
ரஷ்யாவுக்கு அருகில் உள்ள நாடு உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் வாழும் ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷ்யாவுடன் இணைந்தது.
 
அதே பாணியில், கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும், தன்னாட்சி பிரகடனம் செய்துவிட்டு, ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் உக்ரைன் அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள்.
 
அந்த கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுத உதவி செய்து வருவதாக கருதப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த வாரம் கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தினர் என்று நம்பப்படுகிறது.
 
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் விமானத்தில் இருந்த 298 பயணிகளும் உடல் கருகி பலியாகினர்.
 
அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ‘புக்’ ரக பீரங்கியை உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தான் வழங்கியது. எனவே, இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து கூறி வருகிறார்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் தனது ஒரே மகளான 17 வயது இளம்பெண்ணை பறி கொடுத்த தந்தை, தனது அன்பு மகளை இழந்த சோகத்தை ஆற்றிக் கொள்ள வழி தெரியாமல் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 
‘பேஸ்புக்’ மூலம் இந்த திறந்த மடலை எழுதியுள்ள எல்ஸ்மிர்க் டி போஸ்ட் என்ற பலியான பெண்ணின் தந்தையான ஹன்ஸ் டி போர்ஸ்ட் ‘திரு. புடின் அவர்களே..! உக்ரைன் பிரிவினைவாத தலைவர்களே..! அடையாளம் தெரியாத வேற்று மண்ணின் மீது பறந்துக் கொண்டிருந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் எனது ஒரே மகளை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.
 
பள்ளிக் கல்வியை முடித்து விட்டு எஞ்சினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து, பெரிய ஆளாக வர வேண்டும் என்று கனவு கண்ட அவளை சுட்டு வீழ்த்திய பெருமிதத்துடன் நிலைக் கண்ணாடியில் உங்கள் உருவத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.
 
திரு. புடின் அவர்களே.., எங்கள் நாட்டு பிரதமருடன் நீங்கள் பேசிய போது அளித்த வாக்குறுதியின்படி, விமானம் நொறுங்கி வீழ்ந்த இடத்தில் ரஷ்ய படையினரை காவலுக்கு போட்டு, டச்சு நாட்டு புலனாய்வு அமைப்பினரின் நியாயமான விசாரணைக்கு நீங்கள் உதவி செய்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்’ என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.