வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (20:29 IST)

”இது வெறும் முன்னோட்டம் மட்டுமே; இனிமேல்தான் தாக்குதல் தொடங்கும்” - தலிபான் மிரட்டல்

இது வெறும் முன்னோட்டம் மட்டுமே; இனிமேல்தான் தாக்குதல் தொடங்கும் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
நேற்று தாலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தி, தலைமையாசிரியர் மற்றும் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரைக் கொன்று குவித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச் செயலாளர், இந்தியப் பிரதமர், அமெரிக்கப் பிரதமர் உள்ளிட்ட, உலகம் முழுவதிலும் இருந்து பலரும் கண்டனங்களும், இறந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி கூறுகையில், "இந்த தாக்குதல் தாலிபான்களை ஒடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் அரசால் வடக்கு வஜிரிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் வெறும் முன்னோட்டம்தான். இனி இது போன்று பல்வேறு தாக்குதல்கள் நடக்கும்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.