வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2015 (20:48 IST)

குவைத் மசூதியில் ஐ.எஸ் தற்கொலைப்படைத் தாக்குதல்

குவைத்தின் தலைநகரில் உள்ள ஒரு ஷியா மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எவ்வளவு பெரிய தாக்குதல் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இமாம் சாதிக் மசூதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதிரியான தாக்குதல்கள் குவைத்தில் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது. மேலும் எட்டுப் பேர் காயமடைந்திருப்பதாக குவைத்தைச் சேர்ந்த அல் - ஜரிடா நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த மசூதியில் 2000 பேர் கூடியிருந்ததாகவும் திடீரென மாபெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் குவைத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.