1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (14:13 IST)

இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்தில் மர்ம மரணம்

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியா வம்சாவளியினர் மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டில் உள்ள கிளேட்டன் என்ற பகுதியில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில், தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினர் புகார் செய்தனர். உடனடியாக காவல்துறையினர் சென்று, அவர்களது வீட்டுக்கதவை உடைத்து  உள்ளே சென்றனர். அங்கே ஜதீந்திர லாட், மனைவி, மகள்கள் என ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
அவர்களது உடல்களை கைப்பற்றிய இங்கிலாந்து காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகள்களை கொலை செய்துவிட்டு, ஜதீந்திர லாட் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சம்பவம் நடந்து இரண்டு, மூன்று தினங்கள் ஆகியிருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இது குறித்து கூறிய காவல்துறை அதிகாரி சைமன் ஆட்கின்சன், "இப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நால்வரும் எப்படி இறந்தார்கள் என்று யூகமாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை" என்று கூறினார்.