1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (19:57 IST)

இந்துத்துவா மதம் அல்ல; வாழ்க்கை வழிகாட்டி: பிரதமர் மோடி

இந்துத்துவா என்பது என்பது மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி என நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
மூன்று நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கனடாவிலுள்ள வான்கூவருக்கு சென்றார். அங்குள்ள குருத்வாரா, லட்சுமி நாராயணன் கோவில்களில் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் வழிபாடு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்.
 
அவர் கூறுகையில், ''உழைப்பிற்கும், ஒற்றுமைக்கும் சீக்கியர்களை உதாரணமாக கூறலாம். அவர்கள் பணியின் மூலம் இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளனர். அதேபோல், குருநானக்கின் கருத்துக்களும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகவத் சிங் போன்ற சீக்கியர்களின் பங்கும் அபரிமிதமானது.
 
இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி. இதை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்துத்துவா இயற்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்துத்துவா காட்டு விலங்குகள் உள்பட இயற்கையின் நன்மைக்கும் பணியாற்றுகிறது. வாழ்க்கையின் எந்த ஒரு பிரச்னைக்கும் இது வழியை காட்டும்.
 
ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. அறிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் யோகாவின் பெருமைகளை, பயன்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்'' என்றார்.
 
இதையடுத்து, கனடா அரசு அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில், ''எனது கனடா பயணம் வெற்றி பெற்றுள்ளது. 1893-ல் விவேகானந்தர் கனடாவுக்கு வந்தார். அது முதல் ஏராளமான இந்தியர்கள் இங்கு வசித்து வருகின்றனர். கனடாவின் வளர்ச்சியில் அவர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்'' என்றார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடு பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அவர் இன்று கனடாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வருகிறார்.