வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (20:18 IST)

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்; பள்ளி மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய உருக்கமான செய்திகள்

சுமார் 477 பயணிகளுடன் சென்ற தென் கொரிய கப்பலொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானதாகவும், 290க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நடுக்கடலில் மூழ்கிய இந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவுப்படுத்தபடாததால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விபத்திற்கான காரணம் இன்னும் சரிவர தெரியாத நிலையில், இக்கப்பலில், பயணம் செய்தவர்கள், கப்பலில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் பின் கப்பல் மெதுவாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
 
சுமார் 477 பயணிகளுடன் சென்ற அக்கப்பல் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து அபாய சமிக்ஞை அனுப்பியது என்று அந்நாட்டு கடலோர காவல் படையினர் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.  இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  தற்போது, கப்பல் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுமார் 290க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட சிறிய கப்பல்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 179 பேர் காப்பாற்றபட்டுள்ளதாக தெரிகிறது. 
 

கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் காணாமல் போன பள்ளி மாணவர்கள், கப்பல் மூழ்கிய போது அவர்களது உறவினர்களுக்கு அனுப்பிய உருக்கமான செய்திகள், மாணவர்களின் உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரண பிடியில் சிக்கியிருப்பது தெரிந்தவுடன், பல மாணவர்கள், அவர்களது உறவினர்களுக்கு தங்களின் அன்பு, மரண பயம், வேதனை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். 
 
இந்நிலையில், இக்கப்பல் மூழ்க துவங்கியதும், அவசர செய்தி ஒலிப்பரப்பட்டபோது, ' அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படியும், அங்கும் இங்கும் அசைந்தால், ஆபத்து நேரிடுமெனவும்' தெரிவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்து மீட்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கப்பலில் இருந்து தப்பியவர்கள் அனைவரும், அந்த அவசர செய்தியை பின்பற்றாமல் தப்பித்து கப்பலின் மேற்புறத்திற்கு வந்ததால் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மூழ்கிய கப்பலின் கீழ் பகுதியிலேயே இருந்ததால் அவர்களால் தப்ப முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.