வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (15:59 IST)

தற்கொலை வேண்டாம். முடிந்தால் போலிசாரைக் கொல்லுங்கள் : ஹர்திக் பட்டேல்

போராட்டத்தில் ஈடுபடும் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு தைரியம் இருந்தால் போலிசாரைக் கொல்லுங்கள் என்று ஹரிதிக் பட்டேல் கூறியதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி,பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர்  ஹரிதிக் பட்டேல். 
 
சமீபத்தில், இவரின் போராட்டத்துக்கு ஆதரவாக பேசிய விபுல்தேசாய் என்ற இளைஞர், இந்தப் போராட்டத்திற்காக தான் உயிர் தியாகம் செய்ய தயார் என்று கூறியிருந்தர். இதனைக் கேள்விப்பட்ட ஹரிதிக் பட்டேல் அவரது வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரிடம் பேசிவிட்டு இருவரும் வெளியே வந்தபோது விபுல்தேசாய் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
 
அதில் “ஹர்திக் பட்டேல் என்னிடம், நாம் பட்டேல் சமூகத்தின் மைந்தர்கள். நாம் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், இரண்டு அல்லது மூன்று போலிசாரைக் கொல்லுங்கள் என்று கூறினார் ”என்று கூறியதாக தெரிகிறது. இது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹர்திக் பட்டேல்  “போலிஸாரை கொல்லுங்கள் என்று நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. இது இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி. நான் அப்படி கூறியதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். அதன் பிறகு என் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று கூறினார்.