வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (21:40 IST)

எபோலோ நோய் தாக்கி 4992 பேர் பலி; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

எபோலாவால் இதுவரையில் மொத்தம் 4922 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
 

 
இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும், காரணம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவருடைய குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீடுகளிலேயே வைத்திருப்பார்களேயானால், அந்த எண்ணிக்கைகள் எல்லாம் இதில் சேராது என்றும் அது குறிப்பிடுகிறது.
 
மேலும், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மருத்துவமனைகள் ஏற்கனவே எபோலா நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் அது தெரிவிக்கிறது.
 

 
மொத்தமுள்ள உயிரிழப்புகளில் 10 பேரை தவிர மற்றவை அனைத்தும் எபோலாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளான சியரா லியோன், லைபீரியா மற்றும் கினீயில் நிகழ்ந்துள்ளன.
இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் இபோலா வந்ததாக உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 27தான்.
 
எபோலாவால் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது மாலியும் சேர்ந்துள்ளது. மாலியில் எபோலா வந்ததாக அறியப்பட்ட முதல் நபரான இரண்டு வயது குழந்தையொன்று இறந்துவிட்டதை மாலியின் ஆர்.எஃப்.இ வானொலி அறிவித்துள்ளது.

 
 

இந்தக் குழந்தையோடு தொடர்பில் வர நேர்ந்திருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நீடித்துவருகின்றன. இந்தக் குழந்தையின் உயிரிழப்பை அடுத்து அந்நாட்டில் பரவியுள்ள பீதியைத் தணிக்க இயன்ற அனைத்தையும் செய்வதாக அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார்.
 
அதேபோல மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவிவிட்டு நாடு திரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப் படுத்தி வைக்கப்பட வேண்டும் என நியூயார்க் மற்றும் நியுஜெர்ஸி மாகாணங்களுக்கான ஆளுநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


 
கினீயிலிருந்து நியூயார்க் திரும்பியிருந்த மருத்துவர் கிரெய்க் ஸ்பென்சருக்கு எபோலா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தேச மக்களுக்கான தனது வாராந்திர உரையில் எபோலாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 'அமெரிக்காவில் ஏழு பேருக்குஏபோலா வந்திருந்தாலும், அவர்களில அனைவருமே நோயிலிருந்து மீண்டுவிட்டார்கள். எனவே முறையான மருத்துவ நடவடிக்கைகள், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக எபோலாவை வெல்ல முடியும்' என ஒபாமா தெரிவித்துள்ளார்.