1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 மே 2015 (11:16 IST)

மொசாம்பிக்கில் 5 ஆண்டுகளில் 10,000 யானைகள் கொலை

மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின் யானைகளில் சரிபாதியானவற்றை கொன்று அழித்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் வனஉயிரிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.


 
வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 20,000 யானைகளாக இருந்த எண்ணிக்கை, தற்போது வெறும் பத்தாயிரம் சொச்சமாக சரிந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
 
மொசாம்பிக்கின் வடபகுதியில் இந்த பாதிப்பு கூடுதலாக இருப்பதாக கூறும் இந்த அமைப்பு, அங்கிருந்த யானைகளில் 95 சதவீதமானவை கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறது.
 
அண்டைநாடான தான்சானியாவில் இருந்த யானைகளை பெருமளவு வேட்டையாடி அழித்துவிட்டு அங்கிருந்து மொசாம்பிக்குக்கு வந்திருக்கும் வேட்டைக்காரர்கள் தான் இந்த யானைகளின் கொலைகளுக்குக் காரணம் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

 
யானைகளின் தந்தங்கள் ஆசியநாடுகளில் விலை மதிப்புமிக்க தந்தச் சிலைகள், நகைகளாக உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அந்த தந்த வர்த்தகமே யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்கா முழுமையிலும் ஆண்டுக்கு 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.