வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

அரைத்து விட்ட சாம்பார் செய்து பாருங்க....

தேவையான பொருள்கள்:
 
துவரம்பருப்பு - 50 கிராம் 
முருங்கைக்காய் - 6 துண்டுகள் 
மாங்காய் - 4 துண்டுகள்
கத்தரிக்காய் - 1
கேரட் - 1
தக்காளி -1
மல்லித்தழை - சிறிது 
காயம் - 1/4 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு 
உப்பு - தேவையான அளவு
                                
வறுத்து அரைக்க:
 
மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
மிளகு - 1/2 தேக்கரண்டி 
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி            
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
வெங்காயம் - 1/4 பங்கு 
கறிவேப்பிலை - சிறிது

                                  
     
செய்முறை:
 
குக்கரில் துவரம்பருப்பு, பெருங்காயம், சிறிது மஞ்சள் தூள் போட்டு அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
 
அரைக்க கொடுத்த பொருட்களை லேசாக வறுத்து ஆற வைத்து ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கேரட், கத்திரிக்காய், மாங்காய், முருங்கை, தக்காளி மற்றும் அது மூழ்கும்  அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.
 
காய்கள் வெந்து மசாலா வாடை போனதும் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து புளி கரைசல் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். பருப்பு கொதித்தவுடன் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
 
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.  சுவையான அரைத்து விட்ட சாம்பார் தயார்.