வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!

ரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.
உளுத்தம்பருப்பை அரை ஊறல் ஊறவைத்து காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைத்து, அதில் பச்சை கடுகு சேர்த்து சிறுசிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால், இதை பொரித்த குழம்பு, கூட்டு இவைகளுடன் எண்ணெயில் பொரித்துப் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
 
பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய வெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.
 
புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
 
துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும்.
 
எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும்.
 
நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.
 
கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெயுடன் மிளகாய்  பொடி, உப்பு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள்  கரையும்.
 
தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக  இருக்கும். ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.
 
தேங்காய் இளசாக இருந்தாலும் சரி… நன்கு முற்றி ஓட்டை விட்டு கழன்று வரும் நிலையிலிருந்தாலும் சரி. சுலபமாக துருவ, தேங்காயைத்  துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள், பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள்  சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.
 
இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
 
காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.
 
பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.
 
இரவு செய்த சாதம் மீதமாகி விட்டதா? கவலை வேண்டாம். சிறுதுண்டு இஞ்சி, ஓரிரண்டு பச்சைமிளகாய், 1/2 டீஸ்பூன் சீரகப்பொடியுடன் உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கடைந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஊறுகாயுடன் சாப்பிட்டால் ‘தேவாமிர்தம்’ போல இருக்கும்.
 
வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.
 
வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.
 
பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளை மிளகாய்பொடி, உப்புடன் கலந்து 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.