வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:44 IST)

13 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய செல்போன் உரையாடல்

உத்திர பிரதேசத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு வேன் ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே சென்றது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
 
உத்திரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 குழந்தைகள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இந்நிலையில் விபத்தில் உயிர் பிழைத்த கிருஷ்ணவர்மா என்ற மாணவன், வண்டியை நிறுத்தும்படி கூச்சலிட்டதாகவும், வேன் டிரைவர் அலட்சியமாக போன் பேசிக் கொண்டே வண்டியை இயக்கியதால் தாங்கள் கூறியதை அவர் கவனிக்கவில்லை என்றும் கூறினார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு  உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.