தனித்து போட்டியிடாமல் இளங்கோவனை எதிர்கொள்வேன் : ஜோதிமணி முடிவு
அரவங்குறிச்சி தொகுதியில் தனித்து போட்டியிடாமல், கட்சியில் இருந்து கொண்டே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்கொள்வேன் என்று ஜோதிமணி கூறியுள்ளர்.
காங்கிரஸை சேர்ந்த ஜோதிமணி தனக்கு அரவங்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறி, ஒரு வருட காலமாக அங்கு பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார்.
இந்நிலையில், திமுக-காங்கிரஸுக்கு இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டில், அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி, அரவங்குறிச்சி தொகுதியில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
இந்த விவகாரம், காங்கிரஸில் உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையையும், இளங்கோவன் எடுக்கவில்லை.
அரவங்குறிச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன், ஆலோசனையில் ஈடுபட்டார் ஜோதிமணி. அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறும்போது “நான் அரவங்குறிச்சி தொகுதியில் தனித்துப் போட்டியிடப்போவதில்லை. அதே சமயம், அந்த தொகுதியில் திமுக-காங்கிரஸ் வெற்றி பெற வேலை செய்ய மாட்டோம்.
கட்சி தலைவர் இளங்கோவன், இரண்டாம் கட்ட தலைவர்களை நசுக்கப் பார்க்கிறார். கட்சியில் இருந்து கொண்டே அவரை எதிர்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.