பிறந்தநாளில் ஏமாற்றமளித்த சூப்பர் ஸ்டார்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு நேற்று (ஆக.22) 59 -வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் அவர் தனது 150 -வது படத்தை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆவலுடன் சிரஞ்சீவியின் வீட்டுமுன் திரண்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். 150 -வது படம் மிகப்பிரமாண்டமாக சாதனை படமாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்கேற்ற கதையை சொல்கிறவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை கதை தேறியதாக தெரியவில்லை. அதேநேரம் 150 -வது படத்தை வி.வி.விநாயக் இயக்குவார் என்று பேச்சு உள்ளது.
நேற்று தனது பிறந்தநாளில் படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அறிவிப்பு வெளியாகாததுடன் சிரஞ்சீவியும் நேற்று ஊரில் இல்லை. குடும்பத்துடன் நேபாளம் சென்றிருந்தார்.
அதனால் அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள் சிரஞ்சீவியின் ரசிகர்கள்.