வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 19 ஜூலை 2014 (14:55 IST)

த்ரிஷ்யம் ரீமேக் - முதல்முறையாக கமலுடன் இணையும் எழுத்தாளர் ஜெயமோகன்

ஜீத்து ஜோ‌சப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார். ஜீத்து ஜோ‌சப்பே இந்த ரீமேக்கை இயக்குகிறார். இந்தப் படத்தில் முதல்முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
 
மலையாள இயக்குனர் லோகிததாஸின் கஸ்தூரிமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ஜெயமோகன். அவர் வசனம் எழுதிய அங்காடித்தெரு, நான் கடவுள், நீர்ப்பறவை படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. வசந்தபாலனின் காவியத்தலைவன், பாலாவின் தாரை தப்பட்டை படங்களுக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார். 
கமல் ஜெயமோகனின் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிப்பவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் தொகுப்பைதான் வந்திருந்தவர்களுக்கு பரிசாக தந்தார். சென்ற வருடம் கமலின் பிறந்தநாள் அன்று அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட சிலரில் ஜெயமோகனும் ஒருவர்.
 
ஆனால் இதுநாள்வரை இருவரும் இணைந்து பணிபுரியாமலே இருந்தனர். த்ரிஷ்யம் ரீமேக் அந்த குறையை போக்கியுள்ளது. இருவரும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். சென்னையில் எளிமையாக நடந்த இந்தப் படத்தின் பூஜையில் கமல், ஜீத்து ஜோ‌சப்புடன் ஜெயமோகனும் கலந்து கொண்டார். 
 
மலையாளத்தில் வெளியான ஒழிமுறி படத்துக்கு ஜெயமோகன்தான் ஸ்கிரிப்ட். அது பல்வேறு விருதுகளை பெற்றது. தற்போது மேலும் சில படங்களுக்கு அவர் ஸ்கிரிப்ட் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.