1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (15:03 IST)

செக் மோசடி - படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இயக்குனர் சரண்

ஐம்பது லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கில் இயக்குனர் சரண் கைது செய்யப்பட்டார். ஆயிரத்தில் இருவர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
 
இயக்கம், தயாரிப்பு இரு துறைகளிலும் தொடர் தோல்விகளை அனுபவித்த சரண் சிறிது காலம் படம் இயக்குவதிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினய்யை வைத்து செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற படத்தை தொடங்கினார். ஆனால் நினைத்த வேகத்தில் படம் முடியவில்லை.
 
இந்நிலையில் அப்படத்தின் பெயரை ஆயிரத்தில் இருவர் என மாற்றி விளம்பரங்கள் செய்தார். அதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் நடந்து வந்தது. 
 
இன்று காலை சிவகாசி டவுன் போலீஸார் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தனர். ஐம்பது லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளதாகக் கூறி சரணை கைது செய்து அழைத்துச் சென்றனர். 
 
பிரபல இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.