1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (10:11 IST)

“எங்கள் குடும்பத்தில் பெண்களை ’டி’ போட்டு கூட கூப்பிட மாட்டோம்” – கமல்

தங்கள் குடும்பத்தில், பெண்களை ‘டி’ போட்டு கூட கூப்பிட மாட்டோம் என கமல் தெரிவித்து உள்ளார்.

 
எந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும், அதை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது நெட்டிசன்களின் வழக்கமாக இருக்கிறது. யாருக்காவது  துன்பமான சம்பவம் நடந்தால் கூட, அதையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர். சமீபத்தில், சென்னை சில்க்ஸ் எரிந்தபோது  கூட மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்தனர். ஆனால், இந்த மீம்ஸில் அதிகம் மாட்டிக்கொள்வது நடிகர் – நடிகைகள் தான்.
 
இதுகுறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கருணாநிதி, நேரு, காந்தி என எல்லோரையும்  ஒருமையில் தான் அழைக்கின்றனர். உதாரணமாக, ‘எம்.ஜி.ஆர். நல்லா சண்டை போடுறான்’, ‘சிவாஜி நல்லா நடிக்கிறான்’ என்றுதான் சொல்கின்றனர். மூன்று வயது குழந்தை கூட இப்படித்தான் சொல்கிறது. எங்கள் வீட்டில் இதுமாதிரியான  ஏகவசனங்கள் கூடவே கூடாது.
 
விளையாட்டுக்காக கூட எங்கள் வீட்டில் பெண்களை ‘டி’ போட்டு கூப்பிடக் கூடாது. அப்படிக் கூப்பிடுபவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது வாசலில் நின்றவரைப் பார்த்து, ‘பிச்சைக்காரன்  பிச்சை கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டேன். அப்படி சொன்னது தவறில்லை என்றுதான் நினைத்தேன். அவருடைய தொழிலை நான் இழிவாக நினைத்திருக்கலாம்… ஆனால், அவரும் மனிதர் தான். அவருக்கான மரியாதையைக் கொடுக்க  வேண்டுமல்லவா?” என்று பதிலளித்துள்ளார் கமல்.