1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:59 IST)

விசாரணையின் மூலம் கலையின் உச்சியை வெற்றிமாறன் தொட்டுவிட்டார் - மிஷ்கின் பாராட்டு

வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் பார்த்தவர்களை பரவசப்படுத்தி வருகிறது.


 

 
சமீபத்தில், இயக்குனர் விஜய் அமெரிக்காவில் விசாரணை படத்தைப் பார்த்து, வியந்து பாராட்டியிருந்தார். இப்போது மிஷ்கினின் முறை.
 
விசாரணை படத்தைப் பார்த்து தனக்கேயுரிய பாணியில் பாராட்டியுள்ளார். அவர் படம் குறித்து கூறியதாவது...
 
விசாரணை ஒரு மிகச்சிறந்த படம். கலையும் கலைஞனும் கைகோர்த்து புதிய பரிணாமத்தினை எட்டியிருக்கின்றனர். 
 
வெற்றிமாறா, என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய். உன் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்தால் உன்னைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்.
 
ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே ‘விசாரணை’. மனிதம் என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். உன்னையும் படைப்புகளையும் மேலும் மதிப்பார்கள். 
 
நண்பா, உன் ‘விசாரணை’ என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது. இதோ சில வார்த்தைகளை கூவிச் சொல்கிறேன். 
 
சினிமா கலைஞனாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்த பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் ‘விசாரணை’. 
 
இனி வரலாறு சத்தமிடும். 
 
வெற்றிமாறா... தலை நிமிர்ந்து நட...