வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (16:46 IST)

'முருகதாஸ்' மீதான வழக்கு: இன்றே அவசரமாக விசாரிக்கும் உயர் நீதிமன்றம் முடிவு

இயக்குநர் முருகதாஸ் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை  இன்று அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


 
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'சர்கார்' திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக ஆளும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன 
 
 
எனினும் முருகதாஸ் மீது காவல்நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன் ஜாமின் கோரி நவம்பர் 9 ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 27ஆம் தேதி வரை ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.
 
 
இந்நிலையில் முருகதாஸ் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நலத்திட்டங்களை விமர்சித்தது எனது கருத்து சுதந்திரம். அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
முருகதாஸ் மீதான புகார் குறித்து இரண்டு வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை தவறு என்று எந்த நீதிமன்றத்தாலும் கூற முடியாது எனக் கூறி இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
 
இதற்கிடையே அரசு நலத்திட்டங்களை படத்தில் விமர்சித்ததற்காக முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் புகார் அளித்தார்.  இந்த புகாரை ஏற்று முருகதாஸ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது.
 
 இப்பொழுது தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து முருகதாஸ் மனுவை பகல் 2 மணிக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.