வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (14:05 IST)

அக்னி பரீட்சைக்கு தயாராகும் வாலு தயாரிப்பாளர்...?

ஒருகாலத்தில் அஜீத் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து ஓஹோவென்றிருந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை ஆரம்பித்தார். சிம்பு, ஜெய், ஹன்சிகா, தீக்ஷா சேத் என்று பல முன்னணி நட்சத்திரங்கள். பின்னி மில்லில் சில நாள் ஷூட்டிங்கும் நடந்தது.
வேட்டை மன்னன் அண்டர் புரொடக்ஷனில் இருக்கையில் திடீரென்று அதே நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் வாலு படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வாலு முதலில், பிறகு வேட்டை மன்னன் என்றனர். ஆனால் வேட்டை மன்னன் அப்போதே கைவிடப்பட்டது.
 
இப்படி ஆரம்பமே இடியாப்ப சிக்கலில் தயாரான படம்தான் வாலு. ஹன்சிகா, சிம்பு காதல் பிரிவுக்குப் பிறகு படப்பிடிப்பு இழுத்தடித்த வரலாறு தமிழகத்துக்கே தெரிந்த விஷயங்கள்.
 

வாலு சிம்புவின் மார்க்கெட் வேல்யூவை தாண்டி பல மடங்கு வசூலித்தால்தான் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியால் பிடித்து நிற்க முடியும். அதற்கு முதல் தேவை, போட்டி அதிகமில்லாத நேரமாகப் பார்த்து படத்தை வெளியிடுவது. ஆனால் வாலு படத்தின் வெளியீட்டு தேதி குறித்து வரும் செய்திகள் வேறு விதமாக உள்ளன.
ஆகஸ்ட் 15 வாலு படத்தை வெளியிட நினைக்கின்றனர். அதே தேதியில்தான் சூர்யாவின் அஞ்சானும் வருகிறது. சூர்யா, லிங்குசாமி பெயர்கள் தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது. அதனுடன் போட்டியிட்டால் நியாயமாக கிடைக்கும் வசூலில் கணிசமான பகுதியை வாலு இழக்க நேரிடும். 
 
2012 நவம்பர் 23 துப்பாக்கி வெளியான அன்று வீம்புக்காக போடா போடியை வெளியிட்டனர். சுமாராகப் போயிருக்க வேண்டிய படம் துப்பாக்கியின் மாஸ் காரணமாக படுசுமாராகப் போய் சிம்புவின் கரியரில் மோசமான தோல்விப் படம் என்ற பெயரை வாங்கித் தந்தது. ஆகஸ்ட் 15 வாலு வெளியானால் சேதாரம் தவிர்க்க முடியாததாகிவிடும்.
 
இதற்கு மேலும் ரிஸ்க் எடுப்பாரா சக்ரவர்த்தி?