வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (22:59 IST)

கவுதமியின் சம்பள குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

பிரபல நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர். பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் மற்றும் 'தசாவதாரம்' ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்காக அவருக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.

கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்

இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்' படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார். இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம். கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது' இவ்வாறு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.