வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (12:58 IST)

ரஜினிக்கு என்ன ஆச்சு? : புகைப்படம் மூலம் வதந்திக்கு பதிலளித்த ஐஸ்வர்யா

ரஜினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் எழுந்த வதந்திக்கு, அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


 
ரஜினி நடித்து வெளிவரவுள்ள கபாலி பட பாடல்கள் வெளியீட்டு விழா ஜுன் 12 -ஆம் தேதி வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவில், ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் படக்குழு திட்டமிட்டிருந்தது. 
 
ஆனால், அமெரிக்காவில் குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் ரஜினி ஜுன் 12 -ஆம் தேதிக்கு முன் நாடு திரும்ப மாட்டார் என்பதால் கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தாமல் நேரடியாக இணையத்தில் வெளியிடப்போவதாக தகவல் வெளியானது.
 
இதற்கிடையில், கபாலி, 2.0 ஆகிய படங்களில் ஓய்வின்றி நடித்ததால் ரஜினிக்கு ஓய்வு தேவைப்பட்டது எனவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க அவர் அமெரிக்க சென்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லையென்றும், சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளார் என்றும் வதந்திகள் பரவியது. 
 
அவர் உண்மையிலேயே அமெரிக்காவில்தான் இருக்கிறாரா அல்லது சிகிச்சை எடுக்கச் சென்றுள்ளாரா அல்லது மன அமைதிக்காக இமயமலை சென்றுவிட்டாரா என்று தெரியாமல் இருந்தது.




 

 
இந்நிலையில், ரஜினியுடன் அமெரிக்கா சென்றுள்ள அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஒரு புகைப்படத்தை அவருடையை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அப்பாவுடன் வாக்கிங் செல்லும் போது எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளர். 
 
இதன் மூலம், ரஜினி அமெரிக்காவில் நலமாக உள்ளார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.