வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (09:58 IST)

தீபாவளியன்று வெளியாகுமா மெர்சல்?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகுமார் என்பது கேள்விக் குறியாகியுள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ரிலீசிற்கு தயாராக இருக்கிறது. அந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மெர்சல் பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  
 
அதனால், மெர்சல் என்கிற தலைப்பில் விளம்பரம் செய்யக்கூடாது என தடை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் நடந்த வழக்கு விசாரணையில் மெர்சல் பட தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மேல் முறையீடு செய்தார். அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
 
அதன்பின் கேளிக்கை வரி பிரச்சனை வந்தது. புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என விஷால் அறிவித்தார். எனவே, மீண்டும் மெர்சல் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பின் ஒருவழியாக அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது. மெர்சல் படத்திற்கு தணிக்கை துறையின் சான்றிதழும் கிடைத்து படம் ரிலீஸிற்கு தயாரானது.
 
அந்நிலையில், விலங்கு நல வாரியம் மூலம் மீண்டும் இப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் டீசர் வீடியோவில், நடிகர் விஜய் மேஜிக் செய்து ஒரு புறாவை வரவழைப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், அது கிராபிக்ஸ் புறா என நிரூபிக்கும் ஆதாரங்களை படக்குழு இன்னும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில் விலங்கு மற்றும் பறைவைகளை துன்புறுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. 

மேலும், ராஜ நாகத்தை காட்டும் ஒரு காட்சியில், தவறாக நாகப் பாம்பு எனக் குறிப்பட்டிருப்பதாகவும் விலங்கு நல வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இப்படத்திற்கு தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்களை கொடுத்த பின்பே, இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
 
இந்நிலையில்தான், அப்படத்திற்கான முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகிய இருவரும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து விலங்கு நல வாரியம் இன்று காலை அவசரமாக ஆலோசனை செய்யவுள்ளது. 
 
இதில் படக்குழுவிற்கு சாதகமான பதில் கிடைக்குமா இல்லை சிக்கல் ஏற்படுமா என்பது இன்று தெரிய வரும்.