வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (12:33 IST)

திரைத்துறை வேலைநிறுத்தம் - கமல், அஜித், சூர்யா படங்களின் படப்பிடிப்புகள் ரத்து

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய சினிமா தொழிலாளர் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, முழு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை - 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே நடைபெற்று வந்த சம்பள பேச்சுவார்த்தையில் சுமுகமான நிலை ஏற்படாதவரை, படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பது போல், சினிமா தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டார்கள். 
 
அதற்கிணங்க இந்த பிரச்சினையில் ஒரு சுமூகமான நிலை திரும்பும் வரை, உள்ளூர்-வெளியூர் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
 
- ஏற்கனவே ஜுலை 27 முதல் வேலை நிறுத்தத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுவித்திருந்த நிலையில், இந்த அறிக்கை மேலும் முக்கியமானதாகிறது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து கமலின் தூங்கா வனம், சூர்யாவின் 24, சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் உள்பட இரண்டு டஜன் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 
திரையுலகின் இந்த வேலைநிறுத்தம் திரைத்துறையினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.