செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 24 ஜனவரி 2015 (09:32 IST)

கத்தி கதை திருட்டு - விஜய், முருகதாஸுக்கு மீண்டும் சம்மன்

கத்தி படம் வெளியாவதற்கு முன்பே கதைத் திருட்டு புகாரில் சிக்கி நீதிமன்ற வழக்கை சந்தித்தது. மீஞ்சூர் கோபி கத்தி கதை என்னுடையது என்று வழக்கு தொடர, அவரது பத்திரிகை மற்றும் சினிமா நண்பர்கள் கோபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். திடீர் திருப்பமாக கோபி வழக்கை வாபஸ் பெற்றார்.
தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர், தன்னுடைய தாகபூமி குறும்படத்தைதான் கத்தியாக எடுத்திருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தர வேண்டும், என்னுடைய அனுமதி இல்லாமல் படத்தை வேறு மொழிகளில் எடுக்கக் கூடாது என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன், கருணாகரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
 
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சம்மன் அனுப்பப்பட்ட விஜய் உள்பட ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதனால் வழக்கு விசாரணையை 24 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.