நட்சத்திரமாக வேண்டாம்; தொழிலாளியாகவே பாருங்கள் : கமல்ஹாசன் உருக்கம்
தன்னை ஒரு நட்சத்திரம் என்று கூறி அந்நியப்படுத்தாமல், ஒரு தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளங்கள் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பு(ஃபெப்சி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறும்போது “நான் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். திரைப்படத்துறையினரின் அறிவு சார் சொத்து பதிவை செய்ய நாங்கள் தலைநகர் டில்லிக்கு செல்ல வேண்டியுள்ளது. அதை சென்னையிலேயே பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதை ஒரு நட்சத்திரமாக கேட்கவில்லை. சினிமா தொழிலாளியாகவே கேட்கிறேன். கமல்ஹாசன் என்கிற நட்சத்திரத்தை காப்பாற்றிக் கொள்ள எனக்குள் இருக்கும் கடுமையான உழைப்பாளிதான் உதவுகிறார்.
நட்சத்திரம் என்று கூறி என்னை அந்நியப்படுத்த வேண்டாம். என்னை எப்போதும் ஒரு தொழிலாளியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பேசினார்.
அந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் சங்க செயலாலர் விஷால் மற்றும் ஃபெப்சி அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.