செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (10:57 IST)

இசை இளையராஜா, ரஹ்மானின் இசைச் சண்டையா? நவ. 21 தெரியும்

நவம்பர் 9 -ஆம் தேதி தான் தயாரித்து இயக்கி நடித்து இசையமைத்திருக்கும் இசை படத்தின் பாடல்களை எஸ்.ஜே.சூர்யா வெளியிடுகிறார். நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது.
வெளியீட்டு தேதி நெருங்குகையில் இசை குறித்த பதட்டம் அதிகரித்து வருகிறது. ஏன்?
 
இந்தப் படத்தின் கதை அனுபவமிக்க இசையமைப்பாளருக்கும், வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளருக்குமான மோதல் என்று படம் தயாரிப்பில் இருக்கும் போதே கிசுகிசுக்கப்பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் இளையராஜாவையும், ரஹ்மானையும் இன்ஸ்பிரேஷனாக வைத்து இசை கதையை சூர்யா எழுதியிருக்கிறார். அதில் இளையராஜாவை கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக காட்டியிருப்பதுதான் பதட்டத்துக்கான காரணம்.
 
இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துவது போல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான பிரகாஷ்ராஜ் கதையை கேட்டதும் படத்திலிருந்து விலகினார். இளையராஜாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் நான் செய்ய மாட்டேன் என்று அவர் கூறியதாக படத்திலிருந்து அவர் விலகிய நேரம் பேசப்பட்டது. தற்போது அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
 
எஸ்.ஜே.சூர்யா அனுபவம் வாய்ந்தவர். இளையராஜா போன்ற ஒரு ஜாம்பவானை விமர்சிக்க துணிய மாட்டார், இதெல்லாம் வெறும் வதந்தி என்று ஒருசாரார் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
 
எது உண்மை என்பது நவம்பர் 21 தெரிந்துவிடும்.