1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (12:45 IST)

”நான் ஆச்சர்யப்படும் ஒரே விஷயம் இளையராஜாதான்” - கே.பாக்யராஜ் பெருமிதம்

நான் இன்னும் ஆச்சர்யப்படும் ஒரே விஷயம் இளையராஜாவின் இசைதான் என்று நடிகர்  கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
 
நேற்று முன்தினம் இசைஞானி இளையாராஜாவின் இசையில் வெளிவரவுள்ள கிடாபூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளையராஜா, கே.பாக்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 

 
விழாவில் கலந்து கொண்டு பேசிய கே.பாக்யராஜ், “நான் சினிமாவிற்கு வந்த நாள் முதல் இன்று வரை ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கும் ஒரே விஷயம் இளையராஜாவின் இசை. நான் ஸ்கிரிப்ட் எழுத 3 மாதங்கள் எடுத்துக் கொள்வேன். அப்புறம் சூட்டிங் போக மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்வேன்.
 
அதுபோக போஸ்ட் புரொடக்‌ஷன், எடிட்டிங் இதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்வேன். இவ்வளவையும் எடுத்துக் கொண்டு ரீ ரெக்கார்டிங்கிற்கு எடுத்து வருவேன். ராஜா சார் ஒரே ஒரு தடவை படம் பார்ப்பார். அடுத்த நாள் படத்தை போட்டவுடன் ஃபுல் ரீலுக்கும் கம்போசிங் செய்வார்.
 

 
இன்றைக்கு வரைக்கும் எப்படி ஒரு ஞாபக சக்தி இருக்கிறதென்று ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது. அப்புறம் முழுக்க வாசித்த பிறகு நம்மை திரும்பிப் பார்ப்பார். ’வேறு எதாவது சொல்ல வேண்டுமா?’ என்பார். நம்ம என்ன சொல்வது. ஒரு தடவை படம் பார்த்துவிட்டு எப்படி முழு படத்திற்கும் வாசிக்க முடிகிறது என்பது இன்றைக்கு வரைக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.
 
நான் லட்சுமிகாந்த், பியார் லால் எல்லாம் வாசிக்கும்போது பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் மூன்று முறை வாசிப்பார்கள். நான் அப்பொழுது கேட்டேன். ‘நீங்கள் எல்லாம் மூன்று முறை வாசிக்கிறீர்கள். ஆனால் எங்கள் இளையராஜா ஒருமுறைதான் வாசிப்பார்’ என்று.
 
அதற்கு அவர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் திறமையானவர்கள்தான், ஆனால் உங்கள் இளையாராஜா அளவிற்கு நாங்கள் ஒரே தடவையில் எல்லாம் எங்களால் வாசிக்க முடியாது. உங்கள் இளையராஜா உண்மையிலே கிரேட்’ என்று கூறினார்கள். அந்த அளவிற்கு ஆச்சர்யமான மனிதர் இளையராஜா” என்று கூறினார்.