வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (21:02 IST)

சினிமா விருதுகளால் சுசீந்திரன் வருத்தம்

தன்னுடைய படங்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படாததால், வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.


 
 
நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. அதிலும் நிலுவை வைத்து, 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான படங்களுக்கு மட்டுமே விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகக் குரல்கள் எழுந்துள்ளன. விருதுகள் குறித்து இயக்குனர் சுசீந்திரன், தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
 
“நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரை உலகிற்கு விருதுகள் அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதில், என்னுடைய படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு, தேர்வுக் குழுவினருக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ மற்றும் அனைவராலும் பாராட்டைப் பெற்ற ‘நான் மகான் அல்ல’ கிளைமாக்ஸ் ஃபைட்டை இயக்கிய அனல் அரசுவைத் தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. விருதுகள் பெற இருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் சுசீந்திரன்.