வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (11:03 IST)

சமூக வலைத்தளங்களில் அவதூறு; கமிஷனரிடம் நடிகர் ரோபோ சங்கர் புகார்

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் அவதூறாக தகவல்கள் பரவுவதாக நடிகர் ரோபோ சங்கர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் தற்போது தனது பெயரில் சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்கள் பரப்புகிறார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எனது பெயரில் சிலர் வேண்டுமென்றே தவறான, அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பற்றி எனது பெயரில் ஏற்கனவே அவதூறான தகவல்கள் பரப்பினார்கள். 
 
தற்போது கந்துவட்டி பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டி நான் கருத்துகளை பதிவு செய்ததாக தவறான தகவல்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. நான் டுவிட்டரில் இருந்து விலகிவிட்டேன். எனது செல்போனும் காணாமல் போய்விட்டது. 
 
பத்திரிகையாளர்களை பற்றி நான் அவதூறு தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. எனது வளர்ச்சிக்கு பத்திரிகைகள்தான் முக்கிய காரணம். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்றார்.