வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:54 IST)

என் அம்மாவுக்கு போன் பண்ணாதீர்கள் – சின்மயி கோபம்

பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண்களின் பெயரை வரிசையாக வெளியிட்டு வரும் பாடகி சின்மயி தனது தாயாருக்கு போன் செய்ய பத்திரிக்கையாளர்களை எச்சரித்துள்ளார்.


 
சின்மயி கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக செய்திகளை வெளியிட்டு வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்களும் அடக்கம்
.
இந்த குற்றச்சாற்று குறித்து வைரமுத்து மட்டும் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். மற்றவர்கள் யாரும் இதுவரை இதுபற்றி எந்த மறுப்பும் கூறவில்லை. இந்தியன் மி டூ என அழைக்கப்படும் இந்த பாலியல் சர்ச்சைகள் தொடர்பாக இருதரப்பினருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இணைய உலகில் உலாவரத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக பாடகி சின்மயின் தாய் பத்மஹாசினி நேற்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து சின்மயி கூறுவதனைத்தும் உண்மை எனப் பதிலளித்தார். இன்று பாடகி சின்மயியும் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து இதுகுறித்த விளக்கங்களைக் கூறினார்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தனது தாயாருக்கு போன் செய்து தொல்லை தருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் ‘பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் எனது வேண்டுகோள். எனது தாய்க்கு போன் செய்து இது தொடர்பான கேள்விகளைக் கேட்டு தொல்லை செய்யாதீர்கள்.  அவர் 69 வயது நிறைந்த முதியவர். அவரால் ஓரளவுக்குதான் மன அழுத்தத்தைத் தாங்கமுடியும். தயவு செய்து செய்து போன் செய்வதை நிறுத்துங்கள். நன்றி.’ எனக் கூறி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.