1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (09:38 IST)

இந்தியன் இரண்டாம் பாகம் - ஏ.எம்.ரத்னம் விருப்பம்

ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்தவர் ஏ.எம்.ரத்னம். இந்தியன், குஷி, ரன், தூள், பாய்ஸ், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, முதல்வன், சிவகாசி என்று இவர் தயாரித்த பிளாக்பஸ்டர் படங்களின் எண்ணிக்கை பிற தயாரிப்பாளர்களை மூச்சு முட்ட வைக்கும்.

அப்படிப்பட்டவரை ஜோதி கிருஷ்ணா, ரவி கிருஷ்ணா என்ற அவரது இரு மகன்களும் முறையே படம் இயக்குகிறேன், படம் நடிக்கிறேன் என்று கடன் எனும் அதலபாதாளத்தில் தள்ளினர். கடைசியில் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு ரத்னம் தள்ளப்பட்டார்.
 
கடன்களில் மூழ்கியிருந்த அவரை, அவரது படத்தில் நடித்த எந்த ஹீரோவும் கண்டுகொள்ளாத நிலையில், அஜீத் கூப்பிட்டு வாய்ப்பளித்தார். ஆரம்பம் என்ற ஒரே படத்தில் கடனை அடைத்து, என்னை அறிந்தால் படத்தில் தலைநிமிர்ந்து, இப்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்த நீண்ட பிளாஷ்பேக்கை கூற காரணம் உள்ளது. தான் தயாரித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் விருப்பம் ரத்னத்துக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் ஷங்கரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் அகலக்கால் வைக்கிறாரா ரத்னம் என்பதே அவரை அறிந்தவர்களின் கவலையாக உள்ளது.