1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (14:48 IST)

வன்மையாக கண்டிக்கிறோம்... அதிருப்தியாளர்களை எச்சரித்து நடிகர் சங்கம் கண்டன அறிக்கை

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெறும் நேரத்தில், திட்டமிட்டு பிரச்சனையை கிளப்புகின்றனர் சிலர். நடிகர் வாராகி என்பவர் நட்சத்திர கிரிக்கெட்டில் 3 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது என்றும், நடிகர் சங்க கட்டிடம் கடடுவதற்கு ஓபன் டெண்டர் விடாமல் விஷாலின் நண்பரின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த இரு குற்றச்சாட்டையும் விஷால் மறுத்தார். 


 

இந்நிலையில், இதுபோன்ற அவதூறு புகார்களுக்கு கடும் கண்டம் தெரிவித்து நடிகர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2016-2018 காலத்திற்கான தேர்தல் நடந்து மிக சரியாக ஒரு வருடம் நிறைவடையும் இந்த நேரத்தில் எங்களுடைய செயல்பாடுகளை நாங்கள் திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதில் சரி, தவறுகளை ஆராய்ந்து நேர்த்தி செய்து கொள்வது மிக முக்கியமான செயல். உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், கல்வி வசதிகள், பி.யூ.சின்னப்பாவுக்கு நூற்றாண்டு விழா, மருத்துவ அடையாள அட்டை உள்ளிட்ட பல திட்டங்களைச் சிறப்பாக செய்திருக்கிறோம். 
 
நிர்வாகப் பரிந்துரையின் பேரில், செயற்குழு, நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு சங்க மூத்த உறுப்பினர்களைக் கொண்ட கட்டட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து முதற்கட்ட பணிகளும் முழுமையடைந்திருக்கிறது. 

மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே நட்சத்திர கிரிக்கெட் நடத்தி இன்று பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறோம். இந்த செயல்பாட்டில் ஏதாவது குறைகள், சந்தேகங்கள் அல்லது விமர்சனங்கள் இருந்தால் இதை தெளிவுப்படுத்த வேண்டியது எங்களுடைய கடமை. நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ சட்டப்படி எங்களைத் தொடர்பு கொள்பவர்களை நாங்கள் என்றுமே மதித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அதற்கு முரண்பாடாக இருந்தன. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது. சங்கம் தனிப்பட்ட நபர்கள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்காது, சட்டம் வழி காட்டும் திசையிலேயே பயணிக்கும். 
 
உறுப்பினர்களின் நலனுக்காக நேர்மையோடு உழைத்துக் கொண்டிருக்கும் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால், இரண்டு மடங்கு பாய்ச்சலில் அதை எதிர்கொள்வோம். 
 
கட்டடம் கட்டுவது குறித்து சட்ட ரீதியாக பொருளாதாரரீதியாக நடைமுறை ரீதியாக ஆயிரம் முறை அலச வேண்டியிருக்கிறது. அதற்கான காலத்தை அத்திட்டம் எடுத்துக் கொள்ளும். சில நபர்களை சேர்த்துக் கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்குவது போன்ற ஒரு சில சம்பவம் நடந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதை சாதாரணமாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்காக அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் உடனடியாக நடத்தப்படும்.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.