வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (20:45 IST)

மருமகளின் 'நாச்சியார்' படத்தை மாமனார் விமர்சனம் செய்தது எப்படி தெரியுமா?

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல்முறையாக இது பாலா படம் என்பதையும் தாண்டி, ஜோதிகா படம் என்று ரசிகர்கள் மத்தியில் பேச வைத்துள்ளது.

இந்த நிலையில் ஜோதிகாவின் மாமனாரும், பழம்பெரும் நடிகருமான சிவகுமார், பாலாவை நேரில் சந்தித்து 'நாச்சியார்' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் இந்த படம் குறித்து சிவகுமார் கூறியதாவது:

நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார்.

முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.

கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது.

கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்…..

இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.