வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 29 மே 2014 (14:03 IST)

தத்து குழந்தைகளை குலு மணாலி அழைத்துச் செல்லும் ஹன்சிகா

ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து மும்பையில் வளர்த்து வருகிறார். அவர்களின் உறைவிடம், உணவு, உடை மற்றும் கல்வி செலவுகள் மொத்தத்தையும் ஹன்சிகாவே ஏற்றுக் கொண்டுள்ளார். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இரண்டு மூன்று என அவர் தத்தெடுத்த குழந்தைகள்தான் இந்த 25 பேரும்.
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது அம்மாவுடன் குலு மணாலி செல்கிறார். கோடைக்கு ஏற்ற இடம் என்பதால் குலு மணாலியை அவர் தேர்வு செய்துள்ளார். குலு மணாலியிலும், இமயமலை அடிவாரத்திலுமாக மொத்தம் 4 தினங்களை கழிக்க திட்டமிட்டுள்ளார். 25 குழந்தைகளில் இரு குழந்தைகளுக்கு குளிர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அவர்களை மட்டும் மும்பையில் உதவியாளர்களின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார்.
 
பட வேலைகள் குறுக்கிடாவிட்டால் 4 தினங்களையும் குழந்தைகளுடன் செலவிட முடிவு செய்திருக்கிறாராம் ஹன்சிகா. அடுத்த வருடம் 25 குழந்தைகளையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக திட்டம். அதற்காக அனைத்துக் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.
 
நான் ரசிகர்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று போலியாக வாய் பந்தல் போடும் நடிகர்களுக்கு மத்தியில் ஹன்சிகாவின் செயல் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியது.