வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 26 மே 2014 (19:37 IST)

கானில் கன்ஃபார்ம் செய்த ஐஸ்வர்யா ராய்

கான் திரைப்பட விழாவின் நிரந்தர விருந்தாளியாகியிருக்கிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். கான் விழாவில் சிறந்தப் படத்துக்கான பாம் டி ஓர் விருது வாங்கிய முதிய இயக்குனர்களை அத்தி பூத்தார் போல் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. 
கானில் எந்த விருதும் வாங்காத, கான் திரைப்பட விழாவில் நடுவர்களாகக்கூட பங்களிப்பு செய்யாத பல அழகிய நடிகைகள் தவறாமல் அழைக்கப்பட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் கேமராக்களுக்கு போஸ் கொடுக்க பணிக்கப்படுகிறார்கள். மல்லிகா ஷெராவத்தும், ஐஸ்வர்யா ராயும் ஒவ்வொரு வருடமும் கானில் விதவிதமான காஸ்ட்யூமில் கேமராவுக்கு தீனி போடுகிறார்கள். கான் திரைப்பட விழாவில் இந்தியாவின் பங்களிப்பு எதுவுமில்லை என்ற பழி இவர்களால் தீர்ந்தது.
 
குழந்தை பெற்ற பின் சற்றே அதிகமாக பூசிய உடம்புடன், இதுவா ஐஸ்வர்யா ராய் என்று சே வைத்த அதே ஐஸ்வர்யா ராய் இந்த வருடம், அடடே ஐஸ்வர்யா ராய் என்று மூக்கில் விரல் வைக்க வைத்தார். மெலிந்து மெருகுகூடி ஒப்பனையின் பளபளப்புடன் டாலடித்தார்.
 
கடந்த நா‌ன்கைந்து வருடங்களாக படங்களில் நடிக்காமலிருந்த ஐஸ்வர்யா ராய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க காரணம் அவரது நடிப்பு என்றால் நீங்களே அடிக்க வருவீர்கள். ச‌ரி, விஷயத்துக்கு வருவோம்.
 
மணிரத்னத்தின் தெலுங்குப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. அதனை கான் திரைப்பட விழாவில் அவரே தீர்த்து வைத்தார். மணிரத்னம் படத்தில் மட்டுமில்லை, வேறுசில இந்திப் படங்களிலும் நடிக்கயிருப்பதாக அவர் தெ‌ரிவித்தார்.
 
இதுபோதும்... இந்திய பொருளாதாரம் ச‌ரிவிலிருந்து மீளும்.