1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : சனி, 31 மே 2014 (13:35 IST)

கவுன்சிலரை மிரட்டிய பூஜை படக்குழுவுக்கு அபராதம்

ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி நடித்து வரும் பூஜை படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆனைமலை ஆழியாற்றங்கரையில் நடந்தது. அப்போது அனுமதி பெறாமல் போக்குவரத்தை தடை செய்து சாலையில் படப்பிடிப்பு நடத்தியதற்காக பூஜை படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு நா‌ட்கள் முன்புதான் சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இன்னொரு சம்பவம்.
 
ஆழியாற்றங்கரையில் பூஜை படத்தின் சேஸிங் காட்சியொன்றை இயக்குனர் ஹரி நேற்று எடுத்தார். விஷால் காரில் வேகமாக இன்னொரு காரை முந்திச் செல்ல வேண்டும். இந்தக் காட்சியை எடுப்பதற்காக படக்குழுவினர் ஆனைமலை - உடுமலை சாலையில் போக்குவரத்தை முழுவதுமாக தடை செய்தனர். ஆம்புலன்ஸையும் அவர்கள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. 

அதனால் கோபத்துக்குள்ளான பொதுமக்கள் கவுன்சிலர் தலைமையில் படக்குழுவினரை தட்டிக் கேட்டுள்ளனர். படக்குழுவினர் கவுன்சிலரையும், பொதுமக்களையும் மிரட்டியதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து விஷயம் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. விசாரணையில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸாரின் உதவியுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சாலையில் படப்பிடிப்பு நடத்தியதற்கான கட்டணத்துடன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்கான அபராதமும் படக்குழுவிடம் வசூலிக்கப்பட்டது. 
 
போக்குவரத்தை நிறுத்தக் கூடாது, யாரையும் மிரட்டக் கூடாது என்று போலீஸ் தரப்பில் படக்குழுவுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.