வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (19:35 IST)

இயக்குனர் களஞ்சியம் அறைந்ததில் மயக்கம் போட்டு விழுந்த நடிகை

இயக்குனர் மு.களஞ்சியம் ஓங்கி அறைந்ததில் நடிகை பிரியங்கா மயக்கம் போட்டு விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாமி இயக்கியிருக்கும் கங்காரு படத்தில் நடித்தவர் பிரியங்கா. சாமி ஏற்கனவே பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்து புகழடைந்தவர். அவரது படத்தில் அறை விழுமோ என்ற பயத்துடனே நடித்தார் பிரியங்கா. நல்லவேளையாக அப்படி எந்த துர்சம்பவமும் நிகழவில்லை. ஆனால் குருப்பெயர்ச்சி அவருக்கு சாதகமில்லை போலிருக்கிறது.
 
தற்போது கோடை மழை படத்தில் பிரியங்கா நடிக்கிறார். சங்கரன்கோவிலில் இதன் படப்பிடிப்பு நடந்தது. மு.களஞ்சியம் இயக்கும் இப்படத்தில் களஞ்சியம் இன்ஸ்பெக்டராக வருகிறார். கதைப்படி பிரியங்காவின் அண்ணன் மு.களஞ்சியம். 
 
பிரியங்கா ஒரு இளைஞனை காதலிக்கிறார். அது அவரது அண்ணன் களஞ்சியத்துக்கு பிடிக்கவில்லை. இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் கோபத்தில் களஞ்சியம் பிரியங்காவின் கன்னத்தில் ஓங்கி அறைவதாக காட்சி.
 
ரிகர்சலில் சுமூகமாக நடித்தவர்கள் டேக்கின் போது உணர்ச்சிவசப் பட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. களஞ்சியத்தின் அறை இடியாக கன்னத்தில் இறங்க அப்படியே மயங்கி விழுந்திருக்கிறார் பிரியங்கா. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். மயக்கம் தெ‌ளிந்தவர் காது சரியாக கேட்கவில்லை என்று சொல்ல அந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.