1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2014 (11:25 IST)

அடம்பிடித்து அம்மாவாக நடித்த நவ்யா நாயர்

2010-ல் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நவ்யா நாயர் அதன் பிறகு அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வருகிறார். அவரது  ரீ என்ட்ரி மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக தொடங்கியது. பிறகு 2012 -ல் மலையாளப் படமான சீன் ஒந்நு நம்முடெ வீடு படத்தில் நடித்தார். அதன் பிறகு கன்னடப் படம் த்ரிஷ்யா.
மலையாளத்தில் பம்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக் இந்த த்ரிஷ்யா. பி.வாசு இயக்கிய இந்தப் படம் இன்று (20) திரைக்கு வந்துள்ளது. மோகன்லால் நடித்த வேடத்தில் ரவிச்சந்திரனும், மீனா நடித்த வேடத்தில் நவ்யா நாயரும் நடித்துள்ளனர். கதைப்படி நவ்யா 13 வயது சிறுமிக்கு தாய்.
 
படத்தை இயக்கிய வாசுக்கு 13 வயது சிறுமிக்கு தாயாக நவ்யாவை நடிக்க வைப்பதில் சின்ன தயக்கம். நவ்யாவுக்கு அப்படியொன்றும் வயதாகவில்லை என்ற கரிசனத்தில் வந்த தயக்கம்தான் அது.
 
ஆனால் நவ்யாதான் அதெல்லாம் பரவாயில்லை என்று அந்த வேடத்தை கேட்டு வாங்கினார். த்ரிஷ்யம் போன்ற ஒரு படத்தின் ரீமேக்கில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்னடத்தில் அவர் நடித்தார்.
 
நவ்யா நாயருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அதனால்தான் சினிமாவில் அவர் தீவிரமாக நடிக்காமலிருக்கிறார். 
 
மலையாளம், கன்னடத்தில் நடித்தவர் தமிழில் நடிப்பாரா? நவ்யாவை அசத்துகிற கதை அமைந்தால் நிச்சயம் தமிழில் அவரை எதிர்பார்க்கலாம்.