வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia

பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் ராதிகா மனு

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் ராதிகா சரத்குமார் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு தந்ததார்.
FILE

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை.

டிவி சீரியல்களைப் பொறுத்தவரை தினம் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். பெப்ஸியை சேர்ந்த கேமராமேன்கள் சங்கம் ஒத்துழைப்பு தராதபட்சத்தில் நாங்கள் வெளி கேமராமேன்களைப் பயன்படுத்தினால் படப்பிடிப்பில் பிரச்சனை செய்கிறார்கள். படப்பிடிப்பை சுமூகமாக நடத்த போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு செய்திருப்பதாக ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

புதிய கேமராமேன்கள் சங்கத்தை ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், பெப்ஸி கேமராமேன்கள் சங்கம் ஒத்துழைப்பு தராவிட்டால் மட்டுமே வெளி கேமராமேன்களை பயன்படுத்துகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ராதிகாவின் புகாரையடுத்து கமிஷனர் ஜார்ஜ், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கும் இடத்தின் முகவரிகளை கேட்டிருக்கிறார். இன்று நடக்கும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.