வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. A(H1N1)
Written By Webdunia

ஸ்வைன்ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?

webdunia photo
WD
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.

நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.

அவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.

அதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:

1. ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?

விடை: இல்லை.

2. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

விடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்த ஆவுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.

3. ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச்செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.

4. தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன?


விடை: ஏனெனில் தடுப்பூசி மருந்துகள் அபாயகரமானவை. தடுப்பு மருந்து தொழில் துறையினர் தொடர்ந்து இது போன்று எழும் மருத்துவ எச்சரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. தற்செயல் விளைவு என்று இந்த அறிக்கைகள் கூறினாலும், ஏன் தற்செயல்?

5. ஃப்ளூவை திறம்பட தடுக்கும், காலங்காலமாக இருந்து வரும் வைட்டமின் 'டி' ஏன் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதில்லை? வைட்டமின் "டி" அனைத்து தடுப்பு மருந்துகளை விடவும் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது.

விடை: ஏனெனில் வைட்டமின் டி-யிற்கு காப்புரிமை கிடையாது. அதனை ஒரு மருந்தாக விற்கமுடியாது. ஏனெனில் நாமே அதனை நமக்கு உருவாக்கிக் கொள்ளலாம். வைட்டமின் டி தேவையா அதற்கு மருத்துவரின் உதவி கூட தேவையில்லை. சூரிய ஒளியில் ஏகப்பட்ட வைட்டமின் டி உள்ளது.

6. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால்தான் மனிதர்கள் உயிர் வாழ முடியுமெனில், பூமியில் மனித குல வரலாற்றில் எப்படி ஃப்ளூ காய்ச்சலை மீறி வாழ்ந்து வந்துள்ளனர்?

விடை: வைட்டமின் டி உள்ளவரை மனித மரபணு சமிக்ஞை ஏற்கனவே வெளியிலிருந்து வரும் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு அமைந்துள்ளது.

7. ஃப்ளூ தடுப்பு மருந்து கொடுத்தால் ஃப்ளூ தாக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களையே ஃப்ளூ வைரஸ் ஏன் தாக்குகிறது?

விடை: சக்தி வாய்ந்த ஃப்ளூ வைரஸ்களுக்கு தடுப்பு மருந்துகள் பயன் படுவதில்லை. அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் யாருக்கு அது தேவையில்லையோ அவர்கள் உடலில் மட்டுமே வேலை செய்கிறது.

8. 2004ஆம் ஆண்டு ஃப்ளூ தடுப்பு மருந்துகள் தேவைக்கும் குறைவாக கிடைத்தபோதும், தடுப்பு மருந்து போடப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% குறைந்த போதும் ஏன் ஃப்ளூ வைரஸ்களால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை?

விடை: சாவு விகிதங்களில் மாற்றமில்லை. தடுப்பு மருந்தை ஒருவருக்கும் கொடுக்காவிட்டாலும் சாவு எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஏனெனில் ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்வதில்லை.

9. குளிர் காலங்களில் ஃப்ளூவினால் மரணமடைவோர் விகிதம் 10%ஆக இருக்கும் போது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் சாவு விகிதத்தை 50%ஆக குறைக்கிறது என்ற பிரச்சாரம் ஏன்?

விடை: ஏனெனில் 50 சதவீதம் மரண விகிதத்தை குறைக்கிறது என்பது ஒரு விற்பனை உத்தி மட்டுமே. என் அறையில் 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 50 ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட் கொடுக்கிறோம் என்று வையுங்கள், 50% மக்களுக்கு சாக்லேட் ஆரோக்கியமானது என்று நாம் கூற முடியுமா? இதே தர்க்கம்தான் ஃப்ளூ தடுப்பு மருந்தினால் மரண விகிதம் 50% குறைகிறது என்ற பிரச்சாரத்திலும் உள்ளது.

10. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் அபாரமாக வேலை செய்கிறது என்றால் ஏன் மருத்துவ அதிகாரிகள் அதனை முறையான வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கின்றனர்? அதாவது பிளாசிபோ ஆய்வுக்கு ஏன் உட்படுத்துவதில்லை?

விடை: அவர்கள் பிளாசிபோ ஆய்வு அற ரீதியானது அல்ல என்று கூறினாலும், அதைவிட அறக்கேடானது பக்க விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தும் தடுப்பு மருந்துகளை உலகம் முழுதும் கோடிக்கணக்கான பேருக்கு கொடுப்பது.

இது போன்ற பதில் கூற முடியாத கேள்விகளை மைக் ஆடம்ஸ் எழுப்ப காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

தற்போது உலகை உலுக்கி வரும் ஸ்வைன் ஃப்ளூவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளும் அங்கீகரித்து, பல்வேறு கட்டங்களில் அனைவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படும் 'பேன்டம்ரிக்ஸ்' என்ற கிளாக்சோ நிறுவன மருந்தில் துணை மருந்தாக சேர்க்கப்பட்டுள்ளது 'ஸ்க்வாலீன்' என்ற மருந்தாகும்.

அமெரிக்காவை உலுக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு மருந்திலும் இதே ஸ்க்வாலீன் உள்ளது. முதல் வளைகுடாப்போரின் போது இந்த தடுப்பு மருந்து அமெரிக்க ராணுவத்தினருக்கு போடப்பட்டது. கல்ஃப் வார் சின்ட்ரோம் (Gulf War Syndrome) என்று அழைக்கப்படும் நோய் 6,97,000 அமெரிக்க ராணுவத்தினரில் 25% பேரை தாக்கியது. இந்த தடுப்பு மருந்தால் விளைந்த விளைவுதான் இந்த நோய்.

பேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது.

ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார்.

இந்த துணை மருந்து பொருள் அதாவது தடுப்பு மருந்திற்கு உடலின் வினையாற்றும் திறனை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுவதாகக் கூறும் இந்த ஸ்க்வாலீன், பல்வேறு நரம்பு மண்டல நோய்களையும், உடலின் நோய் தடுப்புச் சக்தி தனது திசுக்களையும், உறுப்புகளையுமே தாக்கும் லூபஸ் என்ற நோயையும், முடக்கு வாதத்தையும் உருவாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்துள்ளன.

14 கினியா பன்றிகளிடத்தில் ஸ்க்வாலீனை கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் ஒரு பன்றிதான் உயிரோடு இருந்தது. இதே ஆய்வை மீண்டும் செய்து பார்த்தபோதும் முடிவுகளில் மாற்றம் எதுவும் இல்லை.

அப்படி என்ன இந்த ஸ்க்வாலீன் என்று பார்த்தால் அது ஒரு வகை எண்ணெய் அவ்வளவே. ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை தயாரித்த தி சிரான் என்ற இந்த நிறுவனம் எம்.எஃப்- 59 என்ற துணை மருந்துப் பொருளை தயாரிக்கிறது. இதில் ஸ்க்வாலீனும், கிளைக்கோ புரோட்டீன் - 120, அதாவது ஜி.பி.- 120 என்ற துணைப்பொருளும் அடங்கும்.

தற்போது புழக்கத்தில் உள்ள வாக்சைன்களில் - அதாவது தடுப்பூசிகளில் - இந்த எம்.எஃப்.- 59 உள்ளது. டெடனஸ், டிஃப்தீரியா தடுப்பூசியிலும் இது உள்ளது. இதன் மோசமான பக்க விளைவுகள் பற்றி காலங்காலமாக ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.

கிளைக்கோ புரோட்டீனை மூளையில் உள்ள மைக்ரோக்ளியா செல்கள் உள் வாங்கும் போது தீவிரமான அழற்சியை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிளைக்கோ புரோட்டீனின் ஒரு பகுதிதான் ஹெச்.ஐ.வி. வைரஸிலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் பலருக்கு மனச்சிதைவு (Dementia) நோய் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சில மாதங்களில் தெரிய வருவதல்ல. இதன் நோய்க்கூறுகள் வெளிப்பட, அதாவது வெளிப்படையாக தெரிய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபலப்படுத்தப்பட்ட ஹெபடைடிஸ் - பி நோய் தடுப்பு மருந்திலும் நாம் முன்பு குறிப்பிட்ட திமெரசால் என்ற துணை மருந்துப் பொருள் சேர்க்கப்படுகிறது.

ஃப்ளூ காய்ச்சல், அது எந்த வகையானாலும் சரி, எச்1 என்1 ஆக இருந்தாலும் சரி, அதற்கான தடுப்பூசி மருந்துகளில், அதாவது வாக்சைன்களில் அலுமினியம், திமெரசால் அல்லது ஸ்க்வாலீன் என்ற மேற்கூறிய அபாய விளைவுகளை ஏற்படுத்தும் துணைப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்த ஒவ்வொரு துணை மருந்து பொருளும், நரம்புச் சிதைவு அல்லது நரம்பு தளர்வு நோயையும், வளர்ச்சிக் குறைபாடுகளும், தண்டு வட அழற்சியும் (Spinal Chord Inflammation), பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் கண் நோயும், இன்னும் பிற நோய்களும் உருவாவதாக ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

இந்த மோசமான விளைவுகள் பிரச்சாரம் மூலம் ஒன்றுமில்லாமல் அடிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிற்கும் தடுப்பு மருந்து கொள்கைதான் முக்கியமாகப்படுகிறதே தவிர அதன் மோசமான பின் விளைவுகள் முக்கியமாகப் படுவதில்லை.

பேன்டெம்ரிக்ஸ் என்ற கிளாக்சோ ஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து ஜெர்மன் பத்திரிக்கையான் டை ஸ்ப்லீகல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

டாக்டர் லுத்விக் என்ற ஜெர்மன் மருத்துவ அதிகாரி இந்த மருந்தின் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

வாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.

ஆனால் ஃப்ளூ வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழி உள்ளது. அதாவது வைட்டமின் டி- 3 தான் அது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. நல்ல உணவு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் அல்லது உணவு முறை போன்ற வாழ்க்கை முறையே ஃப்ளூ வைரஸிலிருந்து நம்மை காக்கும்.

வைட்டமின் - டி என்ற நோய்த்தடுப்பு சக்தி

நேச்சுரல் நியூஸ் இணையத் தளத்தில் மைக் ஆடம்ஸ் அக்டோபர் 13ஆம் தேதி எழுதிய கட்டுரைக்கு '6 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கூறுகிறது வைட்டமின் டி உங்களை ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து காக்கிறது என்று' என்று தலைப்பே இட்டுள்ளார்!

இந்தக் கட்டுரையை மைக் ஆடம்ஸ் எழுதுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக ஆரிஜன் ஸ்டேட் பல்கலை கழக ஆய்வு ஒன்று வைட்டமின் டி-யின் நோய் தடுப்பு அரிய குணங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது 6 கோடி ஆண்டுகளான பரிணாம வளர்ச்சியில் இன்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்த வைட்டமின் டி இயல்பாகவே உள்ளது. ஆனால் வைட்டமின் டி அளவை நாம் கச்சிதமாக பராமரிக்கவேண்டும். சூரிய ஒளியிலும், சில உணவுகளிலும் இந்த சத்து நிறைய உள்ளது.

வைட்டமின் டி வேலை செய்யும் விதம் நம் உடலின் இயல்பான தற்காப்பு சக்தி எந்த ஒரு புற நோய் சக்திகளுக்கும் எதிராக அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வதில்லை. மாறாக உள்ளிருக்கும் தடுப்பு சக்தியை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வைக்கிறது. அதிகமாக எதிர்வினையாற்றினால்தான் அழற்சி என்ற 'இன்ஃப்ளமேஷன்' ஏற்படுகிறது.

எனவே வைட்டமின் டி - குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதில் குளிர்காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகிறது. துவக்க நோய்க்கிருமியை தடுப்பதோடு, அதிகமாக எதிர்வினையாற்றி அதனால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதிலிருந்தும் தடுக்கிறது. 1918ஆம் ஆண்டு பரவிய ஃப்ளூ நோயில் இறந்தவர்கள் இந்த அதிகப்படியான எதிர்வினையால் ஏற்பட்ட பேக்டீரியல் நிமோனியா என்ற நுரையீரல் அழற்சி நோயாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் வைட்டமின் டி சத்தை தக்கவைத்துக் கொள்ளும் உணவு முறை, அல்லது மருந்துகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது.