வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

அனைவரும் விரும்பும் சுவையான தேங்காய் போளி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
தேங்காய் (முற்றியது) - 2
வெல்லம் - 300 கிராம்
மைதா - ½ கிலோ
உப்பு - சிறிதளவு
மஞ்சள்பொடி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 50 கிராம்

 
செய்முறை:
 
தேங்காயை பூவாக துருவிக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பின் நல்ல ஒரு கம்பிப்பதம் வரும்வரை பாகாக்கி கொள்ளவும். துருவிய தேங்காயைச் சேர்க்கவும். சேர்ந்து வரும்வரை கிளறவும். வெல்லம் அதிகமாகிவிட்டால் கடலைமாவை நெய்யில் வறுத்து அதில் சேர்த்தால் பூரணம் கெட்டிப்படும். முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிசெய்து பூரணத்தில் சேர்த்து கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.  பூரணம் தயார்.
 
மைதாவை சிறிது நீர்விட்டு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சிறிது நேரம் ஊறவிடவும். சிறு  சிறு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவும். அதேபோல் பூரணத்தையும் பிரித்துக்கொள்ளவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக  இடவும்.

பூரணத்தை நடுவில் வைத்து ஓரங்களால் மூடவும். பின் மாவு தோய்த்து குழவியால் அதிகம் அழுத்தாமல் சற்று  கனமாக இட்டு தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிறுது எண்ணெய் அல்லது நெய் விட்டு வேகவைத்து எடுத்தால்  சுவையான தேங்காய் போளி தயார்.