வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2016 (17:37 IST)

மரண பூக்கள்.... தெரியுமா??

பூக்கள் மென்மையானவை. ஆனால் எல்லா பூக்களும் அப்படி இல்லை. சில பூக்கள் உயிரைப் பறிக்கும் தன்மையுடையவை. அப்படிப்பட்ட பூக்களில் ஒரு சில இதோ...

 
கால்மியா லாடிஃபோலியா (Kalmia Latifolia):   
 
பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தை சேர்த்த வண்ணம். அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனக்டிகட் உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தப் பூக்கள் இருக்கின்றன.
 
இந்த பூவில் கொடிய விஷத்தன்மை உண்டு. தெரியாமல் இதை கொஞ்சம் அழுத்தமாய் முகர்ந்தாலோ, பறித்து வாயில் போட்டாலோ வாந்தியில் தொடங்கி, ஹார்ட் அட்டாக், கோமா என மரணத்தில் கொண்டு விடும். 
 
இந்த பூவில் தேன் குடிக்கும் தேனீ சேமித்து வைக்கும் தேனைச் சாப்பிட்டாலும் மரணம் நேரும். 
 
ஓனாதே க்ரோகாடா (Oenanthe Crocata):  
 
வெள்ளை நிறத்தில் இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற இடங்களில் இந்த பூக்கள் அதிகமாய் வளரும். பெரும்பாலும் ஈரமான பிரதேசங்களில் காணப்படும். 
 
இந்த பூவைத் தெரியாமல் சாப்பிட்டால், மூளை மயங்கி போதை ஏறும். 70 சதவீதம் மரணம் நிச்சயம்.
 
மயக்கமடைவது, பித்துப்பிடித்தது போல அலைவது, உளறிக்கொட்டுவது, பின்நோக்கி விழுவது, சட்டென உடலில் எங்கோ ஒரு வலி தோன்றி தலையில் போய் சம்மட்டி அடிப்பது, கண்கள் மேல் நோக்கி சொருகுவது, மூக்கில் ரத்தம் வடிவது என கொடுமை படுத்தும்.
 
அடேனியம் ஒபிசம் (Adenium Obesum):
 
ஆப்பிரிக்க கண்டத்தில் விளையும் இந்த வகைப் பூ கொடிய விஷம் உடையது.
 
இந்தப் பூக்களைப் பறித்து அரை நாள் கொதிக்க விட்டு, நீர் ஆவியாகிப் போனபின் வற்றிக் கிடக்கும் கெட்டியான பிசின் கொடிய விஷம். ஆதிவாசிகள் அம்புகளின் நுனியில் விஷத்தைத் தடவி விலங்குகள் மீது எய்துவதற்கு பயன்படுவது பெரும்பாலும் இந்த விஷம் தான்.
 
இது கொஞ்சம் உடம்பில் சென்றால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்கோ, மனிதனோ கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விடுவான்.
 
சங்குனாரியா கனாடெனிசிஸ் (Sanguinaria Canadensis):  
 
கர்ப்பமான பெண்கள் இதை முகர்ந்து பார்த்தால், தாய்மை நிலை கேள்விக்குறியாகி விடும். அதுமட்டுமல்ல, இதன் நச்சுத் தன்மை உடலில் இறங்கினால் கோமா நிலைக்குப் போய்விடும் அபாயமும் உண்டு.
 
இந்த பூக்கள் தோலிலுள்ள செல்களை கொன்று விடுமளவுக்கு ஆபத்தானவை.
 
செர்பெரா ஒடொல்லம் (Cerbera odollam):
 
இது நமது இந்தியாவிலுள்ள ஒரு பூ. ‘சைலன்ட் கில்லர்’ என அழைக்கப்படுகிறது. இந்த பூவில் விஷத்தன்மை உண்டு. அந்த விஷத் தன்மை உடலில் கலந்து விட்டால் வெளியே தெரியாது.
 
கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் அந்த விஷம் மெதுவாய்ப் பரவி முதலில் மயக்கத்தையும், அப்படியே மரணத்தையும் தந்து விடும். விஷம் உடலில் கலந்திருப்பதையும் கண்டு பிடிப்பது கடினம். 
 
கோல்கியம் ஆடம்னேல் (Colchicum Autumnale):
 
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற இடங்களில் தான் இவை செழித்து வளரும்.
 
இதை நிறைய சாப்பிட்டால் மரணம் நிச்சயம். ஆனால், உடலின் ஒவ்வொரு பாகமும் செயலிழக்க, வலியில் துடித்து சாக வேண்டி வரும். 
 
கேஸ்டர் செடி (Castor plants):
 
ஆமணக்கு எண்ணெய் இந்த செடியிலிருந்து தான் வருகிறது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் இந்தச்செடி விஷத்தன்மை உடையது.
 
தெரியாமல் ஒன்றிரண்டு விதைகளைச் சாப்பிட்டால் மரணம் நேரிடுவதைக் கூட தவிர்க்க முடியாது. 
 
இப்போதைக்கு கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் நூலில் அதிக விஷமுடைய செடி எனும் பெயர் இதற்கு உண்டு. 
 
ஏஞ்சல் ட்ரம்பெட் (Angel Trumpet):
 
ட்ரம்பெட் இசைக்கருவியைப் போன்ற அமைப்பில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும். தென்னமெரிக்கக் காடுகளில் இது அதிகம் காணப்படுகின்றன.  
 
ஆனால் இந்த பூக்களிலுள்ள நச்சுத்தன்மை உடலில் கலந்தால் அவர்கள் சுயநினைவில்லாதவர்கள் போல எதையெதையோ செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் முழுமையான உணர்வுடன் தான் இருப்பார்கள். உளவியல் ரீதியிலான பாதிப்புகளை இந்த பூ உண்டாக்கிவிடும். 
 
டெத் காமாஸ் (Death Camas):
 
இந்த செடியில் இரண்டு வகைப் பயிர்கள் உண்டு. ஒன்று சாப்பிடக்கூடிய வகை, அதை ‘எடிபிள் காமாஸ்’, இன்னொரு வகை ‘டெத் காமாஸ்’.
 
இரண்டையும் பார்த்து சட்டென வித்தியாசம் காண முடியாது. கொஞ்சம் சாப்பிட்டால் கூட உள் உறுப்புகளையெல்லாம் காலி செய்து மனிதனை சாகடிக்கும் இந்த தாவரம்.