1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (14:24 IST)

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் - த்ரிஷா பேட்டி

தனி ஒருவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. தெரு நாய்கள் முதல் நயன்தாராவரை த்ரிஷாவிடம் கேட்கவும், அவருக்கு சொல்லவும் நிறைய இருக்கிறது.
 
எந்த எந்த விஷயம் குறித்தும் தயங்காமல் வருகிறது அவரது பதில்.
கேரளாவில் தெருநாய்களை கொல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? மோகன்லால் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளாரே?
 
தெரு நாய்களை கொல்ல சொல்வது ஈவு-இரக்கமற்ற செயல். அவைகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டுவிடலாம். கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சென்னை செனடாப் சாலையில் உள்ள என் வீட்டு அருகில் கூட 10 தெரு நாய்கள் அலைகின்றன. அவைகளை பாதுகாப்பாக இடத்தில் கொண்டு போய் விடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 
 
வருண் மணியனுடான திருமணம் நின்றதற்கான காரணத்தை நீங்கள்இதுவரை கூறாதது ஏன்?
 
அது முடிந்த போன கதை. அதை மீண்டும் கிளறவேண்டாம். அதற்கு விளக்கம் சொல்ல நான் விரும்பவில்லை. அதில் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் காரணத்தை வெளியே சொல்ல விரும்பவில்லை. 
 
திருமணத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறதா?
 
கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. எனக்குப் பொருத்தமான ஆள் கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.

லிவிங் டுகெதர் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
அது அவரவர் விருப்பம்.
 
காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
 
காதல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. 
உங்களுக்கு காதல் வந்திருக்கிறதா?
 
இரண்டு மூன்று  முறை காதல் வந்திருக்கிறது. 
 
 
நீங்கள் அரசியலிலில் குதிக்கப் போவதாக செய்தி வந்ததே?
 
எனக்கு அரசியல் 40 சதவீதம் தான் தெரியும். அதை முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அரசியல் மோசமான விசயம் அல்ல. ஆனால் இப்போதைக்கு நான் அதில் ஈடுபடப்போவதில்லை. மார்க்கெட் போன நடிகைகள் தான் உடனே திருமணம் செய்துகொள்வார்கள் அல்லது அரசியலில் ஈடுபடுவார்கள். நான் இன்னும் மார்க்கெட்டில் தான் இருக்கிறேன். 
 
எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க விருப்பம்?
 
நயன்தாரா. நானும் நயன்தாராவும் நல்ல தோழிகள். இருவரையும் சேர்ந்து நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். குறிப்பாக டைரக்டர் வெங்கட்பிரபு எங்கள் இருவரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.