வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (09:42 IST)

சூர்யாதான் என் உலகம் - ஜோதிகாவின் நெகிழ்ச்சி பேட்டி

நேற்று ஜோதிகாவின் நாள். திருமணமான பின் அவர் நடித்திருக்கும், 36 வயதினிலே படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. கணவர் சூர்யா, இரு குழந்தைகள், கொழுந்தன் கார்த்தி என்று ஜோதிகாவின் சுற்றமும் நட்பும் சூழ நடந்தது விழா. அப்போது ஜோதிகா பேசியது இங்கே உங்களுக்காக.
மீண்டும் நடிக்க காரணமாக இருந்தவர்கள் யார்?
 
இந்தப் படத்தில் நடிப்பதற்கு பெரிய பலமாக இருந்தது என் ப்ரெண்ட்ஸ் என்ற பெண் சக்திகள். அனு, தேவி, பூர்ணிமா உள்ளிட்ட சில முக்கியமான தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் இந்தப் படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்தது.
 
மாமா, மாமியார்...?
 
அத்தை, மாமா இருவரையும் நான் அப்பா, அம்மா என்றுதான் அழைப்பேன். இதுவரை, இப்படி பண்ணாதே என்று எதற்கும் அவர்கள் தடை போட்டது கிடையாது.
 
தமிழில் பெண்களை மையப்படுத்திய படம் அபூர்வமாகிவிட்டதே?
 
பெண்களை மையமாக வைத்து படங்களை உருவாக்கும் ட்ரெண்ட் தற்போது தமிழில் இல்லை. மலையாளம், தெலுங்கு, இந்தியில் அந்த ட்ரெண்ட் உள்ளது. இந்த சூழலில் பெண்ணை மையமாக வைத்து இப்படி ஒரு கதையின் பின்னணியில் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி. 

குழந்தைகளை ஆண், பெண் என பிரித்துப் பார்த்து நடத்துவது சரியா?
 
என்னோட சின்ன வயதில், என் அம்மா தம்பியை எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ, அதே மாதிரிதான் என்னையும் ட்ரீட் பண்ணுவாங்க. பையன், பொண்ணு என்று அம்மா பிரித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் இப்போ வரைக்கும் எனக்கு பல இடங்களில் உதவியாக இருக்கிறது. 
படப்பிடிப்பு அனுபவம்...?
 
ஷுட்டிங் ஸ்பாட்ல எல்லோருமே அழகான அனுபவத்தோடுதான் கழித்தோம். ஒரு குடும்பமாகதான் பழகினோம். இப்படியொரு சிறந்த படத்தை தந்த ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு என்னுடைய நன்றி.
 

 

 
சூர்யா...?
 
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சூர்யா. அவர்தான் என் உலகம். சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதர். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்.